கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ராகிங் - தடுப்பது, தப்பிப்பது எப்படி?

கல்வி நிறுவனங்களில், சீனியர் மாணவர்களால், ஜுனியர் மாணவர்களின் மீது இழைக்கப்படும் பல்வேறான சட்டவிரோத இன்னல்களே ராகிங் எனப்படுகிறது. ராகிங் என்பது பலவிதங்களில் நடத்தப்படுகிறது.
* ஜுனியர் மாணவர் எந்த உடை அணிய வேண்டும் என கட்டளையிடும் உடைரீதியான ராகிங்.
* குடும்ப பின்னணி, ஜாதி மற்றும் பிற ஏற்றத்தாழ்வுகளை வைத்து நிகழ்த்தப்படும் வார்த்தைக் கொடுமைகள்.
* மரத்தில் ஏறு, சத்தம் போடு போன்ற செயல்களை செய்ய வற்புறுத்தும் சில்லரைத்தனமான ராகிங்.
* உடைகளை கழட்டு என்று மிரட்டும் பாலியல் ரீதியான ராகிங்.
* கேன்டீன் பணத்தைக் கட்டு, சிகரெட் மற்றும் மது வாங்கி வா போன்ற பொருளாதார ரீதியிலான சுரண்டல் ராகிங்.
* இந்த பையை தூக்கி வா, இந்த அசைன்மென்டை நீ செய்துவிடு போன்ற உடல்ரீதியிலான துன்புறுத்தல்.
* ஜுனியர் மாணவர்களை மொத்தமாக பென்ச் மீது ஏறி நிற்கச்சொல்லுதல் போன்ற மாஸ் ராகிங்.
இதுபோன்ற பலவித ராகிங் செயல்பாடுகளால், ஒரு மாணவர், உடல்ரீதியாக பாதிக்கப்படுவதோடு, மனரீதியாகவும் மோசமாக பாதிக்கப்படுகிறார். அவர்களின் தன்னம்பிக்கை உடைந்து, மனச்சிதைவு ஏற்படுகிறது.
இந்த ராகிங் செயல்பாடுகள் பல நேரங்களில் கொலைகளிலும், தற்கொலைகளிலும் சென்று முடிந்துள்ளன. பலர், வாழ்வில் தடம் மாறி சென்றுள்ளனர்.
மாணவர்களுக்கான 24மணி நேர ஹெல்ப்லைன்
கடந்த 2009ம் ஆண்டின் ராகவன் கமிட்டி பரிந்துரைப்படி, ராகிங் தடுப்பு தொடர்பான ஒரு வழிகாட்டு நெறிமுறையை உச்சநீதிமன்றம் வழங்கியது. வாரத்தின் அனைத்து நாட்களும், 24 மணிநேரமும் புழக்கத்திலிருக்கும், மாணவர்களுக்கான ஒரு ஹெல்ப்லைன் ஏற்படுத்தப்பட்டது. ராகிங்கால் தன் மகனை இழந்த ராஜேந்திர கச்ரூ எனும் ஒரு பேராசிரியர், இந்த ஹெல்ப்லைன் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். அவர், அமன் சத்யா கச்ரூ டிரஸ்ட்(ASKT) -ஐ உருவாக்கினார். ஆனால், அந்த ஹெல்ப்லைனில் பல குறைபாடுகள் இருந்தன.
புகார்கள் 24 முதல் 48 மணி நேரங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. மேலும், பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றமிழைப்பவர் ஆகியோரின் உண்மையான அடையாளத்தை தெரிவிக்க வேண்டியிருந்தது. இதைத்தவிர, தாமதத்தினால், ஒரு சில மாணவர்களுக்கே பயன் கிடைத்தது.
ஹெல்ப்லைனை சரிசெய்தல்
2012ம் ஆண்டு ஜனவரி மாதம், கால் சென்டர் கண்காணிப்பிற்கு, ASKT -க்கு அனுமதி வழங்கியது. எனவே, தற்போதைய நிலையில், ஒரு மாணவர், தனது அடையாளத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் புகார் பதிவுசெய்ய முடியும் மற்றும் புகாரானது, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு 15 நிமிடத்திற்குள் தெரிவிக்கப்படும். மேலும், Caller recording machine இயந்திரம் மற்றும் மாணவர் மற்றும் கல்லூரி ஆகியவற்றின் தகவல் தரவுதளத்தை உருவாக்க ஒரு மென்பொருளும் தற்போது நிறுவப்பட்டுள்ளது என்று ராஜேந்திர கச்ரூ தெரிவிக்கிறார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் நிரப்பப்படும் கட்டாய அபிடவிட்டுகளால்(mandatory affidavit), குற்றம் இழைப்பவர்களை, ஹெல்ப்லைன் நெருக்கமாக கண்காணிக்கும்.
எங்கே ராகிங் அதிகம்?
நகர் அல்லது ஊரிலிருந்து மிகவும் ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் கல்லூரிகளிலேயே ராகிங் நடவடிக்கைகள் மிகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற கல்லூரிகளை மீடியாவும், ராகிங் தடுப்புக் குழுக்களும் எளிதாக அணுக முடிவதில்லை. மேலும், பல கல்லூரிகளும், தங்களின் இமேஜ் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ராகிங் குற்றங்களை மறைத்து விடுகின்றன.
ராகிங் கொடுமைப் பற்றி பெரும்பாலான புகார்கள், ஒரிஸா, பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தே வருகின்றன என்பதாக கச்ரூ தெரிவிக்கிறார். மேலும், ராகிங் நடவடிக்கைகள், மாணவர்கள் எப்போதும் ஒன்றாகவே தங்கியிருக்கும் ரெசிடென்ஷியல் வகையிலான கல்லூரிகளிலேயே அதிகம் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனியாரிட்டி போதை
பொதுவாக, பொறியியல் கல்லூரிகளை ஒப்பிடுகையில், மருத்துவ கல்லூரிகளிலிருந்துதான் ராகிங் புகார்கள் அதிகம் வருகின்றன. உதாரணமாக, 250 மருத்துவக் கல்லூரிகளை எடுத்துக்கொண்டால், அவற்றில் 100 கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகள் உள்ளன. ஏன், மருத்துவக் கல்லூரிகளில் அதிகம் என்றால், அங்கே, சீனியர் டாக்டர்களை, ஜுனியர் டாக்டர்கள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் சீனியர்களுக்கு மனதில் ஒரு போதை ஏற்பட்டு விடுகிறது. நாம் என்ன சொன்னாலும் அவர்கள் செய்தாக வேண்டும் மற்றும் அவர்கள் நம் ஆதிக்கத்தின் கீழ் என்ற எண்ணம் ஏற்பட்டு, பல முறைதவறிய நடவடிக்கைக்கு வழி வகுக்கிறது. இதனைத் தடுக்க, கல்லூரி ஆசிரியர்களும், ஊழியர்களும் தொடர்ந்த கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் நடவடிக்கை
சில கல்வி நிறுவனங்கள் ராகிங் விஷயத்தில் கடினமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. தமிழகத்திலுள்ள விஐடி பல்கலை மற்றும் ஐஐடி-கான்பூர் போன்றவைகளை இவற்றுக்கு உதாரணமாக கூறலாம். கண்காணிப்பு கேமரா பொறுத்துதல், தனி கண்காணிப்பாளர்களை பணியமர்த்தல், மாணவர்களிடம் தொடர்ச்சியாக குறைகளைக் கேட்டு, அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல், ஆசிரியர்கள், மாணவர்களின் மீது தனி கவனம் செலுத்துதல், பிடிபடும் மாணவர்களை இடைநீக்கம் செய்தல் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
ராகிங் செய்வோரின் மறுபக்கம்
ஒருவகையில் பார்த்தால் ராகிங்கில் ஈடுபடுபவர்களும் மனநலம் சரியில்லாதவர்களே. அவர்கள் ராகிங்கை தங்களுக்கான ஒரு வடிகாலாக நினைக்கின்றனர். தெளிவான அறிவும், தெளிந்த சிந்தனையும் உடையவர்கள் அந்த நடவடிக்கையில் ஈடுபடும் வாய்ப்பில்லை.
எனவே, அதுபோன்றவர்களை, தொழில்துறை சார்ந்த ப்ராஜெக்ட்டுகள் மற்றும் Extra curricular activities போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
நீங்கள் எவ்வாறு உதவலாம்?
ராகிங்கால் பாதிக்கப்பட்டவர்களை கண்டால், அவர்களுக்கு காயமிருப்பதை கண்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும். பாதிக்கப்பட்டவருக்கு சிறிது ஓய்வும், மன ஆறுதலும் தேவை. ஆனால், ராகிங்கை தடுப்பதற்கான தொடர் கண்காணிப்பும், கடுமையான தண்டனைகளும் உண்டு என்பதை பாதிக்கப்பட்டவர் அறிந்தால்தான், அவர் விரைவில் சகஜ நிலைக்கு வருவார்.
ராகிங் புகாரை பதிவுசெய்வது எவ்வாறு?
Anti-ragging helpline, anti-ragging online NGOs மற்றும் internal college helplines ஆகியவற்றில் அழைக்கவும்.
24 மணி நேரத்திற்குள், காவல்துறையிடம் எப்ஐஆர் பதிவு செய்யவும்.
அடையாளத்தை வெளிக்காட்டி கொள்ளாமல், நண்பர் உதவியுடன் ஆர்டிஐ பதிவு செய்து, அபிடவிட் நகலைப் பெற்று, ராகிங் செய்வோரின் பெற்றோரிடம் தெரியப்படுத்தவும். www.no2ragging.org/samplerti.doc என்ற வலையிலிருந்து RTI மாதிரியைப் பெறவும்.
சர்வதேச ராகிங் தடுப்பு ஹெல்ப்லைன் எண் - 1800-180-5522. இ-மெயில் - helpline@antiragging.net
ஆன்லைன் அபிடவிட்டை www.antiragging.in மற்றும் www.amanmoment.org ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்யவும்.
கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி வழங்கியுள்ள வழிகாட்டல்கள்
சேர்க்கை கையேட்டில், ராகிங் தடுப்பு ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட வேண்டும்.
ராகிங்கில் ஈடுபட மாட்டோம் என்று பெற்றோரும், மாணவர்களும் உறுதியளித்த அபிடவிட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் தொலைபேசி எண் மற்றும் முகவரி அடங்கிய நோட்டீசை விநியோகிக்க வேண்டும்.
புகார் கொடுப்பவரின் அடையாளம் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.
முடிந்தளவிற்கு, புதிதாக சேர்பவர்களை, சீனியர்களுடன் அல்லாமல், தனி ஹாஸ்டலில் தங்க வைக்க முயற்சிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...