கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சேலம் இரயில்வே கோட்டம் - வயது ஆறு...[Salem Railway Division - Age 6]

சேலம் ரயில்வே கோட்டம் துவங்கி ஐந்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், கோவையின் ரயில்வே தேவைகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளன. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கொங்கு மண்டலப்பகுதிகள் அனைத்தும், பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் இருந்தன; கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய முக்கிய நகரங்கள் உட்பட கொங்கு மண்டலப்பகுதிகள் பெரும்பாலும் அதில் இருந்ததால், கோட்டத்தின் மொத்த வருவாயில் பெரும்பங்கை தமிழகமே கொடுத்து வந்தது.ஆனால், இங்கு கிடைக்கும் வருவாயைக்கொண்டு, கேரளாவிலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்துவதிலேயே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் குறியாக இருந்தனர். புதிய ரயில்கள் விடுவது, புதிய ரயில் பாதைகள் அமைப்பது, ரயில்வே ஸ்டேஷன் மேம்பாடு என எல்லாவற்றிலும் தமிழக பகுதிகள் புறக்கணிக்கப்பட்டன.

இதனால், சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டம் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்தது; போராட்டங்கள் வெடித்தன; அதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இறுதியில், கொங்கு மக்களின் போராட்டம் வென்றது; 2007 நவ.1 அன்று சேலம் ரயில்வே கோட்டம் துவக்கப்பட்டது.ஐந்தாண்டுகளை முடித்து, ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சேலம் ரயில்வே கோட்டத்தால் கோவை மக்களுக்குக் கிடைத்த பலன்களை பட்டியலிட்டால், ஓரளவுக்கு திருப்தியும், பெருமளவு எதிர்பார்ப்பும் மிஞ்சி நிற்கின்றன.முதல் பலனாக, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், ஊட்டி, குன்னூர் ரயில்வே ஸ்டேஷன்கள், கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கின்றன. சேலம் கோட்டத்திலேயே அதிகளவு வருவாயை ஈட்டித்தரும் கோவை ரயில்வே ஸ்டேஷன், கடந்த ஐந்தாண்டுகளில்தான் வளர்ச்சியின் பாதையில் அடியெடுத்து வைத் துள்ளது.இரண்டாவது சுரங்க நடைபாதை, கூடுதல் பிளாட்பார்ம், கூரைகள், சிறுவாணி குடிநீர் வசதி என சில வசதிகளைப் பெற்றுள்ளது; ஆனால், செய்யப்பட வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாய் மிச்சமிருக்கின்றன. செம்மொழி மாநாட்டின்போது, அவசர கதியில் முகப்பு தோற்றம் மாற்றப்பட்டது. ஆனால், அப்போது திட்டமிடப்பட்ட பல பணிகள் கை விடப்பட்டுள்ளன. பாலக்காடு கோட்டம் இருந்த போதே அறிவிக்கப்பட்ட, பல அடுக்கு மாடி "பார்க்கிங்' வெறும் கனவாகவே உள்ளது. கடந்த பட்ஜெட்டில் "ஆதர்ஷ்' ரயில் நிலையமாக கோவையை அறிவித்தது ஓர் ஆறுதல். அது வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.கிட்டத்தட்ட இருபது லட்சம் மக்கள் வசிக்கும் கோவையின் ரயில்வே ஸ்டேஷனில், மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கான சாய்வு தளமோ, லிப்ட் வசதியோ, மின்கல வாகனமோ (பேட்டரி கார்) எதுவுமில்லை; அவசரத்துக்கு ஒரு மருந்து வாங்குவதற்கு சிறிய மருந்துக்கடை கூட இல்லை.ரயில் பெட்டி எங்கே நிற்குமென்பதைத் தெரிவிக்கும் "கோச் கெய்டிங் சிஸ்டம்' விரைவில் அமைக்கப்படுமென்று டி.ஆர்.எம்., உறுதி கூறி, பல மாதங்களாகியும் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. மேற்கு வாயிலில் உள்ள "டிக்கெட் கவுன்டர்'கள் பெரும்பாலும் மூடியே கிடக்கின்றன.கோவை ரயில்வே ஸ்டேஷனில் ஓய்வறைகளை "ஆன்லைன்' மூலமாக பதிவு செய்யும் வசதி இன்று வரை செய்யப்படவில்லை. இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து இங்கு தொழில் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வருபவர்களுக்கு, இந்த வசதி இருந்தால் பெரிதும் பயனளிக்கும்; அதேபோல, இங்கிருந்து வெளியூர் செல்வோருக்கும் பேருதவியாக இருக்கும். இவையெல்லாம் எளிதாகத் தீர்க்கக் கூடிய குறைகள்தான்; ஆனால், கோவையை ரயில்கள் புறக்கணித்துச் செல்வதற்கு எப்போது தீர்வு கிடைக்குமென்பதை யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலை உள்ளது. வடகோவை-இருகூர் இடையே இரு வழிப்பாதை இல்லை என்ற காரணத்தால், கேரளா செல்லும் ரயில்கள் அனைத்தும் போத்தனூர் வழியே சென்றன. அதற்கு தீர்வு காணும் வகையில், இருகூர்-வடகோவை இடையே இரு வழிப்பாதை (கூடுதல் பாதை) அமைக்க, 1996 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது; நத்தை வேகத்தில் நடந்த அந்த பணிகள், சேலம் கோட்டம் அமைந்த பின்புதான் வேகமெடுத்தன. மொத்தம் 60 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த பணியும், கோவை-போத்தனூர் இரு வழிப்பாதையும் சமீபத்தில்தான் முடிவடைந்தன. சேலம் கோட்டம் துவங்கியிருக்காவிட்டால், இவ்விரு ரயில்வே பாதைகளும் முடிவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகியிருக்கும்.இரு வழிப்பாதை இல்லாததை காரணம் காட்டி, போத்தனூர் வழியாக கேரளாவுக்குச் சென்ற 13 தொலை தூர ரயில்களும், இந்த பாதை திறக்கப்பட்ட பின், திருப்பி விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கோவை ரயில்வே போராட்டக்குழு தொடர்ந்து போராடி, பலரையும் சந்தித்து முறையிட்டதற்குப் பின், 4 ரயில்கள் மட்டுமே கோவைக்குத் திருப்பி விடப் பட்டுள்ளன. மற்ற ரயில்களையும் கோவைக்குள் திருப்பினால் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு இந்த ரயில்களைத் திருப்ப வேண்டுமென்பதில், சேலம் கோட்டத்திலுள்ள தமிழக அதிகாரிகளும் சிறிதும் அக்கறை காட்டுவதில்லை. கோவை-வடகோவை- பீளமேடு-சிங்காநல்லூர்-இருகூர் வழியிலான ரயில் பாதையை, துணைப்பாதையாக இன்னும் வைத்திருப்பதே இதற்கு சிறந்த உதாரணம். பாலக்காட்டிலிருந்து இருகூர்-போத்தனூர் வழியாக ஈரோடு செல்லும் ரயில் பாதை மட்டுமே, முக்கிய ரயில் பாதையாக உள்ளது. கோவை நகர் வழியிலான வழித்தடத்தையும் முக்கிய ரயில் பாதையாக அறிவித்தால், கோவைக்கு "டாட்டா' காட்டும் ரயில்கள் அனைத்தும் இங்கே திருப்பி விடப்படுவது எளிதாக இருக்கும்.கோவை ரயில்வே ஸ்டேஷனை விரிவாக்கம் செய்வதற்கு வாய்ப்பில்லாதபட்சத்தில், அங்குள்ள நெரிசலைக் குறைக்கும் வகையில், வடகோவை, பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ரயில்வே ஸ்டேஷன்களையும் மேம்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.கேரளாவில் சிறுசிறு ரயில்வே ஸ்டேஷன்களெல்லாம் பளிங்குக் கற்களில் பளபளக்கும் நிலையில், இந்த ரயில்வே ஸ்டேஷன்கள் அடிப்படை வசதிகளின்றி அலங்கோலமாகவுள்ளன. கழிப்பிடம், குடிநீர், கூரையுடன் கூடிய பிளாட்பார்ம், நடை மேம்பாலம் போன்ற வசதிகளைச் செய்தால், மக்கள் இந்த ரயில்வே ஸ்டேஷன்களை அதிகம் பயன்படுத்துவர்; கோவை ஸ்டேஷனிலும் நெரிசல் குறையும். இதற்கெல்லாம் பெரிய அளவில் நிதி தேவையில்லை; கோவை ரயில்வே ஸ்டேஷன் மட்டுமே, ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தருகிறது; பிற ரயில்வே ஸ்டேஷன்களையும் சேர்த்தால், 140 கோடி ரூபாயைத்தாண்டும். அதில் ஒரு பகுதியையாவது, இந்த ஸ்டேஷன்களை மேம்படுத்த ஒதுக்கினாலே போதுமானது.சேலம் ரயில்வே கோட்டம் அமைப்பதற்காக போராடிய அரசியல்கட்சியினர் பலரும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுப்பதே இல்லை. பிற எம்.பி., க்களைப் போல் இல்லாமல், கோவை எம்.பி., நடராஜன், ரயில்வே போராட்டக் குழுவினருடன் சேர்ந்து பல முயற்சிகளை மேற்கொள்கிறார் என்பது ஆறுதல் தரும் விஷயம்.இந்த முயற்சிகளுக்கு பிற கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் கை கொடுப்பதில்லை. கோவையின் ரயில்வே தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குரல் கொடுக்கும் பொறுப்பு, அனைத்துக் கட்சியினருக்கும் உள்ளது; கேரள மக்கள் பிரதிநிதிகளைப்போல், எல்லோரும் இணைந்து போராடாதவரை, புறக்கணிப்பு என்பது ரயில் பெட்டிகளாய் நீண்டு கொண்டேதானிருக்கும்.
அக்கறை காட்டும் அதிகாரி:
சேலம் கோட்டம் டி.ஆர்.எம்., ஆக சுஜாதா ஜெயராஜ் பொறுப்பேற்ற பின்பே, கோவை, திருப்பூர் உட்பட பல ரயில்வே ஸ்டேஷன்களில் வளர்ச்சிப்பணிகள் கொஞ்சம் வேகமடைந்துள்ளன. ரயில்களை கோவைக்குத் திருப்புவது, புதிய ரயில்கள் இயக்குவது, ரயில்வே மேம்பாலப்பணிகள் உட்பட பல்வேறு விஷயங்களிலும் சுஜாதா காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது.சேலம் கோட்டத்தின் ஐந்தாண்டுப் பணிகளைப் பட்டியலிட்ட அவர், ""வளர்ச்சிப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்; எங்களது கவனத்துக்கு வரும் பல்வேறு குறைகளையும் நிவர்த்தி செய்கிறோம்; ஒவ்வொரு கோரிக்கையாக நிறைவேற்றப்படுகின்றன. கோட்டம் வந்ததால், நிறைய பலன்கள் கிடைத்துள்ளதை யாரும் மறுக்க முடியாது,'' என்றார்.

இடமிருக்கு...மனமில்லை!
கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் 104 எக்ஸ்பிரஸ் (52 ஜோடி) ரயில்களும், 16 பாசஞ்சர் (8 ஜோடி) ரயில்களும் வந்து செல்கின்றன; 30 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள், இந்த ஸ்டேஷனை தினமும் பயன் படுத்துகின்றனர். முன் பதிவின்றி பயணிப்போர் எண்ணிக்கை மட்டும், 8 ஆயிரம்; நாளுக்கு 25 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டித்தருகிறது இந்த ஸ்டேஷன். இதை விட குறைவான வருவாய் தரும் மதுரை, திருச்சி, சேலம் ரயில்வே ஸ்டேஷன்கள் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கின்றன. கோவை ஸ்டேஷன் குறுகிக்கிடப்பதற்கு இடப்பற்றாக்குறையும் முக்கியக் காரணம். புதிய பிளாட்பார்ம்கள், "பார்க்கிங்', "பிட் லைன்' போன்ற வசதிகளை ஏற்படுத்த இட வசதி போதாது. இதனை விரிவாக்கம் செய்வது, அவசர அவசியமாகும். கலெக்டர் அலுவலகத்தை இடம் மாற்றியோ அல்லது மத்திய ஜவுளித்துறைக்குச் சொந்தமான என்.டி.சி., மில் இடத்தை வாங்கியோ இதனைச் செய்யலாம்.
கார்ப்பரேஷன் கவனத்திற்கு...
கோவையில் மிகமிக அவசரமாக நடைபாதை மேம்பாலம் அல்லது சுரங்க நடைபாதை அமைக்க வேண்டிய இடம், கோவை ரயில்வே ஸ்டேஷன் முன்புறம்தான். இங்குதான் தினமும் பல ஆயிரம் பொது மக்கள், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ரோட்டைக் கடக்கின்றனர். இந்த வழியில் தினமும் கார்களில் கடந்து போகும் மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் கொஞ்சம் கண்ணாடியை இறக்கி விட்டு, இந்த மக்கள் படும் அவலத்தைப் பார்த்தால் நல்லது.
நல்லதே நடந்துள்ளது!
கோவையின் ரயில்வே தேவைகளுக்காக தொடர்ந்து போராடி, அதில் பல வெற்றிகளையும் காண்பதற்கு காரணமானவர்களில் முக்கியமானவர் கோவை எம்.பி., நடராஜன். சேலம் கோட்டத்தின் ஐந்தாண்டு செயல்பாட்டைப் பற்றி அவர் சொல்கிறார்... நிச்சயமாக நல்லதே அதிகம் நடந்துள்ளது; அதற்காக, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்களும், நன்றிகளும்.கடந்த இரு ஆண்டுகளில், துரந்தோ எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் உட்பட கோவைக்கு புதிதாக 10 ரயில்கள் கிடைத்துள்ளன. மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில், நிரந்தரமாக்கப்பட்டிருக்கிறது; ஈரோடு ரயில் கோவைக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.மேட்டுப்பாளையம் வரையிலுமான ரயில் பாதையை மின் மயமாக்கும் முயற்சிகள் துவங்கியுள்ளன; போத்தனூர் வழியாக கேரளா சென்ற 13 ரயில்களில் 5 ரயில்கள் திருப்பப்பட்டுள்ளன; முப்பது ஆண்டுகளுக்குப் பின், பல ரயில்கள் கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்கின்றன. நமது தேவைகள் இன்னும் நிறையவேயிருக்கின்றன. முக்கியமாக, மேலும் 3 ரயில்களைத் திருப்ப தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கோவைக்குள் இந்த ரயில்களைத் திருப்பினால், நேரம் அதிகரித்து, "சூப்பர் பாஸ்ட்' என்ற தகுதியை இழக்க வேண்டியிருக்குமென்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இது குறித்து, ரயில்வே போர்டுக்கு நான் விரிவாகக் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு எம்.பி., நடராஜன் தெரிவித்தார்.
கோட்டம் வந்தும் வாட்டம் தீரலை!
சேலம் ரயில்வே கோட்டம் துவங்கிய பின்னும், கோவையைப் புறக்கணித்து வந்த ரயில்வே அதிகாரிகளை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்தது கோவை ரயில்வே போராட்டக்குழுதான்; பல்வேறு அரசியல்கட்சியினர், தொழில் அமைப்புகள், சமூக அமைப்புகளை ஓரணியில் திரட்டி போராடியவர் இதன் ஒருங்கிணைப்பாளர் நாகராஜ். அவர் சொல்கிறார்...கோட்டம் துவங்கி, ஐந்தாண்டுகளில் கடந்த இரு ஆண்டுகளாகத்தான் கோவை கொஞ்சம் கவனிக்கப்படுகிறது. போராட்டக்குழுவுடன் ஒன்று பட்டு போராட முன் வந்த மக்கள் பிரதிநிதிகள், தொழில் அமைப்பினர், மக்கள் எல்லோருக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு. குறிப்பாக, கோவை எம்.பி.,நடராஜனின் பங்களிப்பு மகத்தானது. இதேபோல, மற்ற மக்கள் பிரதிநிதிகளும் கைகோர்த்தால் இன்னும் பல விஷயங்களை சாதிக்க முடியும். டி.ஆர்.எம்., சுஜாதா ஜெயராஜ் வந்தபின், அவரது அதிகாரத்துக்குட்பட்டு பல பணிகளைச் செய்துள்ளார். இருப்பினும், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனை ஒப்பிட்டால், கோவையின் நிலைமை பரிதாபம்தான்.லிப்ட், சாய்வு தளம் (ரேம்ப்) வசதிகள் கூட இல்லை. பீளமேடு, இருகூர் ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்தினால், கோவை ரயில்வே ஸ்டேஷனில் நெரிசல் குறையும். வீரபாண்டி ஸ்டேஷனை மேம்படுத்தத் தனியார் தயாராகவுள்ளனர்; அனுமதி கிடைக்கவில்லை. ஒட்டு மொத்தமாக, சேலம் கோட்டம் வந்ததால் ஓரளவு மன நிறைவு இருக்கிறது; வாட்டம் முழுதாகத் தீரவில்லை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்...

   2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்... Academic Year 2023-2024 - Details of School Working Days... >>> தரவிறக்கம...