கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தையலை உயர்வு செய்! - சுகி.சிவம்

"பாபு ஏன் உம்முன்னு இருக்கே?" என்றார் தாத்தா.

"தாத்தா, பாய்ஸ்தானே ஒசத்தி. கேர்ள்ஸ் மட்டம்தானே! பாட்டியை விட நீங்கதானே ஒசத்தி?" என்றான். "பாபு, என்னைவிட பாட்டிதான் ஒசத்தி. அதுமட்டுமில்லை... பள்ளிக்கூடத்துல படிக்குறப்ப உன்னோட பாட்டி என்னைவிட அதிகமா மார்க் வாங்குவாங்க. ரொம்ப நல்லா பாடுவாங்க. ஆமா, உனக்கு ஏன் இப்படியரு சந்தேகம்?" என்றார் தாத்தா.

"நான்தான் எங்க கிளாஸ் லீடரா வந்துருக்கணும். ஆனா, கீதாவை டீச்சர் லீடராக்கிட்டாங்க. கேர்ள்ஸைவிட பாய்ஸ்தானே உசத்தி தாத்தா" என்று சோகமாக சொன்னான்.

சிரித்துக் கொண்டே பேசினார் தாத்தா. "வீர சிவாஜியை அவ்வளவு பெரிய ராஜாவா ஆக்கினவங்க யாரு தெரியுமா பாபு? அவங்க அம்மா ஜீஜாபாய்.

ஒருநாள் களைத்துப் போய் வந்த சிவாஜியை, சதுரங்கம் விளையாட கூப்பிட்டாங்க ஜீஜாபாய்.

"களைப்பா இருக்குதும்மா. நான் வரலே" என்றாராம் சிவாஜி.

"ஆட்சியில் இருப்பவனுக்கு ஏதுடா களைப்பு?" என அவரை சீண்டிவிட்டு விளையாட வச்சாங்க. இந்த விளையாட்டில், ஜெயிச்சவங்க கேக்கறதை தோத்தவங்க தரணும் அப்படீங்கிறதுதான் ஒப்பந்தம்! அவங்க அம்மா ஜெயிச்சுட்டாங்க. "உனக்கு என்னம்மா வேணும்? எத்தனை சாதுக்களுக்கு சாப்பாடு போடணும். எந்த கோவிலுக்கு என்ன செய்யணும்?"னு கேட்டார் சிவாஜி. அவரது கையை புடிச்சு இழுத்துக்கிட்டுப் போய் கோட்டையின் மேல்தளத்தில் இருந்து வெகு தொலைவில் தெரிந்த 'சிம்மகாட்' கோட்டையை காட்டினாங்க. அதில் பறந்து கொண்டிருந்த சுல்தானின் கொடியை காட்டி "நீ என்மகன்கிறது நிஜம்னா, நாளைக்கு சூரியன் மறையறதுக்குள்ளே அந்தக் கொடி இறங்கணும். உன் கொடி அதுல பறக்கணும்"னு உற்சாகமா சொன்னாங்க. திகைத்துப் போன சிவாஜி,"அம்மா அவன்தான் மிகப்பெரிய வீரனாச்சே..." என்றார்.

"அவனை ஜெயிச்சாதான் நீ மாவீரன்! என் பிள்ளை" என்றார் ஜீஜாபாய். இரவோடு இரவாக உடும்புகளின் வாலில் கயிற்றைக் கட்டி கோட்டை சுவர் மீது வீரர்களை ஏற வைத்து காலையில் போரை தொடங்கி மாலையில் ஜெயித்தார் சிவாஜி. அம்மாவின் ஆசைப்படியே அவரது கொடியை 'சிம்மகாட்' கோட்டையில் பறக்கவிட்டார். வெறும் சிவாஜியை வீர சிவாஜி ஆக்கியது ஒரு பெண். மகாகவி பாரதிக்கு ஞானம் ஊட்டிய நிவேதிதா தேவி ஒரு பெண். அதனால்தான் பாரதி எழுதிய புதிய ஆத்திச்சூடியில் 'தையலை உயர்வு செய்' என்று முழங்கினார்" என வரலாற்று நிகழ்வுகளை சொல்லி முடித்தார் தாத்தா.

"கரெக்ட் தாத்தா. கீதா எப்பவுமே பர்ஸ்ட் ரேங்க் எடுக்குறா. அதனாலதான் அவளை டீச்சர் லீடர் ஆக்கியிருப்பாங்க" என்று சிரித்தபடியே ஓடினான் பாபு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...