கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நவம்பர் 30 : கணினி பாதுகாப்பு தினம்!

உங்கள் கணினி பாதுகாப்பாக இருக்க வாழ்த்துகள்!

இன்று - நவம்பர் 30 : கணினி பாதுகாப்பு தினம்!
உங்கள் கணினி பாதுகாப்பாக இருக்க வாழ்த்துகள்!

இன்று - நவம்பர் 30 : கணினி பாதுகாப்பு தினம்!

>>>ஓ பக்கங்கள் - இரு மாணவர்கள் தற்கொலை - ஓ பக்கங்கள், ஞாநி

காதல் வந்தால் சொல்லியனுப்பு.... உயிரோடிருந்தால் வருகிறேன்’, - இது ஒரு பிரபலமான சினிமாப் பாடல். காதலுக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்புதான் இந்த வாரம் என் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அடுத்து ஐ.ஐ.டி.யிலும் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களில் காதல் பிரச்னையும் ஒன்று என்று செய்திகள் சொல்கின்றன. காதல் ஏன் எப்படிப் பிரச்னையாகிறது?

>>>ஓ பக்கங்கள் - இரண்டு கடிதங்கள்! ஞாநி

கடிதம் 1:
அன்புள்ள கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் வணக்கம்.
இதற்கு முன்பு உங்கள் இருவருக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதியிருக்கிறேன். இருவருக்குமாக ஒரே கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை. முந்தைய கடிதங்களை நீங்கள் பொருட்படுத்தாதது போல இதையும் அலட்சியம் செய்வது உங்கள் விருப்பம். எனினும் எழுதுவது என் கடமை.
தீபாவளியை இருவரும் அவரவர் வழியில் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடும் எப்படி அன்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்தது என்பதை கீழ்வரும் செய்திகளிலிருந்து அறிந்து மகிழும்படி கேட்டுக் கொள்கிறேன்.

>>>தகவல் தொழில்நுட்ப சட்டத்தை திருத்த கோரி வழக்கு

 
பால் தாக்கரே மறைவு குறித்து, சமூக வலை தளமான,"பேஸ்புக்'கில் விமர்சித்த இளம் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் தற்போது, சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டியுள்ளது.தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில், இதுதொடர்பான சட்டப் பிரிவில் திருத்தம் செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
கடைகள் அடைப்பு
சிவசேனா தலைவர் பால் தாக்கரே, சமீபத்தில் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்துக்காக, மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து மும்பையை சேர்ந்த, இரண்டு இளம் பெண்கள், சமூக வலைதளமான, "பேஸ்புக்'கில் கருத்து தெரிவித்திருந்தனர்.அதில், "நாட்டில், தினமும் நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். அவர்களுக்காக, கடைகள் அடைக்கப்படுவது இல்லை. பால் தாக்கரே மறைவுக்காக, கடைகள் அடைக்கப்பட்டதற்கு, அவர் மீது உள்ள மரியாதை காரணமல்ல; சிவசேனா கட்சியினர் மீது உள்ள, பயமே காரணம்' என, கூறியிருந்தனர். இந்த விவகாரம், மும்பையில் பரபரப்பு ஏற்படுத்தியதால், இருவரும் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் கைதுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த மாணவி, ஷ்ரேயா சிங்கால் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், நேற்று பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், அவர் கூறியுள்ளதாவது:
"தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 - பிரிவு 66ஏ, மிகவும் விரிவாகவும், தெளிவற்றதாகவும் உள்ளது. எந்த நோக்கத்திற்காக, இந்த சட்ட விதி இயற்றப்பட்டதோ, அதை பூர்த்தி செய்ய முடியாததாக உள்ளது. அதனால், சட்டப் பிரிவை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.பேச்சு சுதந்திரத்திற்கு ஆபத்து. அத்துடன், இந்த சட்ட விதியால், அரசியல் சட்டத்தின், 21வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள, அடிப்படை உரிமைகள் மீறப்படும் அபாயமும் உள்ளது. பேச்சு மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்திற்கு, சிக்கல் உண்டாக்குவதாகவும் இருக்கிறது. எனவே, தகவல் உரிமைச் சட்டத்தின், இந்த பிரிவில், திருத்தங்களை மேற்கொள்ளும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, அல்தமஸ் கபீர் தலைமையிலான, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:சமீபத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களையும், இந்தச் சட்டப் பிரிவின் கீழ், சிலர் கைது செய்யப்பட்டதையும், கோர்ட் கவனத்தில் கொண்டுள்ளது. இருந்தாலும், தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின், குறிப்பிட்ட அந்தப் பிரிவை எதிர்த்து, ஏன் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பது, வியப்பாக உள்ளது. அதனால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம்.தற்போது, இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால், சமூக வலை தளங்களில், கருத்துக்களை தெரிவிப்பவர்களுக்கு எதிராக, அரசு தரப்பினர், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்; அதனால், அதிரடியாக எந்த தடை உத்தரவும், இப்போது பிறப்பிக்க தேவையில்லை. வழக்கின் விசாரணை, நாளைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகனவதி, சுப்ரீம் கோர்ட்டிற்கு உதவ வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழிகாட்டி குறிப்பு வெளியீடு
தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின், பிரிவு, 66ஏ-வை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டப் பிரிவு தொடர்பாக, வழிகாட்டிக் குறிப்பு ஒன்றை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
அதில், கூறப்பட்டுள்ளதாவது:சமூக வலைதளங்களில், யாராவது ஆட்சேபகரமான கருத்துக்களைத் தெரிவித்தால், அந்த நபருக்கு எதிராக, அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த, போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியோ அல்லது இன்ஸ்பெக்டரோ, "தகவல் தொழில் நுட்பச் சட்டம், 2000' பிரிவு, 66ஏ-ன் கீழ், தற்போது வழக்கு பதிவு செய்யலாம்.

மூன்றாண்டு சிறை
இந்தச் சட்டப் பிரிவு, ஜாமினில் வெளிவரக் கூடிய சட்டப் பிரிவு என்றாலும், குற்றம் நிரூபணமானால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.ஆனால், இனி, இந்தச் சட்டப் பிரிவின் கீழ், யார் மீதாவது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனில், கிராமப்புறங்களில், ஐ.ஜி., அந்தஸ்திலான அதிகாரியிடமிருந்தும்; நகரங்களில், துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரியிடமிருந்தும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரி, அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்ற பின்னரே, யார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.இந்த புதிய வழிகாட்டிக் குறிப்புக்களை, அனைத்து மாநில அரசுகளும், கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு வழிகாட்டிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வழக்கு: கைவிட மகா., போலீஸ் முடிவு
மும்பை பால்தாக்கரேயின் இறுதி ஊர்வலம் தொடர்பாக, ஆட்சேபகரமான கருத்துக்களை, "பேஸ் புக்கில்' வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட, இரு பெண்களுக்கு எதிரான வழக்குகளை கைவிட, மகாராஷ்டிரா போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக, மகாராஷ்டிரா மாநில போலீஸ், டி.ஜி.பி., சஞ்சீவ் தயாள் கூறியதாவது:தாக்கரேயின் இறுதி ஊர்வலத்தின் போது, கடைகள் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளமான பேஸ் புக்கில், கருத்துக்களை வெளியிட்ட, ஷாகீன் ததா, ரினு ஸ்ரீனிவாசன் என்ற, இரு பெண்கள், கைது செய்யப்பட்டனர். பின், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.மும்பையை சேர்ந்த இந்த இரு பெண்களுக்கு எதிராக, எந்த விதமான குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. அவர்களுக்கு எதிரான வழக்கை கைவிட, மகாராஷ்டிரா போலீஸ் முடிவு செய்துள்ளது. வழக்கை முடித்துக் கொள்வது தொடர்பான அறிக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு சஞ்சீவ் தயாள் கூறினார்.

>>>உடற்கல்வி ஆசிரியர் பணி கலந்தாய்வு தேதி அறிவிப்பு

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அடுத்த மாதம், 7ம் தேதி, கலந்தாய்வு நடக்கிறது.

தமிழக அரசின் செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளிகளில், 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டிற்கு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஒதுக்கீடு பெறப்பட்டது. இதன் படி, ஆதிதிராவிடர் நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட, 47 பேருக்கு, அடுத்த மாதம், 7ம் தேதி, 11:00 மணிக்கு, சேப்பாக்கம், எழிலக இணைப்பு கட்டடத்தில் உள்ள, ஆதி திராவிடர் நல கமிஷனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடக்கிறது. அன்று, உரிய சான்றுகளுடன், தவறாமல் ஆஜராக வேண்டும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

>>>ஓய்வூதிய திட்ட நிதியில் முறைகேடு: ஆசிரியர்கள் புகார் : தணிக்கையும் இல்லை; கணக்கும் இல்லை

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடிக்கப்படும் நிதியில், முறைகேடுகள் நடப்பதாகவும், கணக்கு விவரங்களை, ஆசிரியர்களுக்கு தருவது இல்லை எனவும், ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு, ஓய்வூதிய நிதி குறித்த கணக்குகள், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, பொது கணக்கு தணிக்கை அலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது. தொடக்க கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் கணக்கு விவரங்கள், சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, "டேட்டா சென்டர்' மையத்தில் பராமரிக்கப்படுகிறது.

>>>நவம்பர் 30 [November 30]....

நிகழ்வுகள்

  • 1612 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானியர் வென்றனர்.
  • 1700 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.
  • 1718 - நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான்.
  • 1782 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
  • 1803 - ஸ்பானியர்கள் லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தனர். பிரான்ஸ் இப்பிரதேசத்தை 20 நாட்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
  • 1806 - நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றினர்.
  • 1853 - ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.
  • 1872 - உலகின் முதலாவது அனைத்துலக காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
  • 1908 - பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1917 - முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.
  • 1936 - லண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது.
  • 1939 - சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு குண்டுகளை வீசீன.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: டெஹ்ரானில் கூடிய அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஜூன் 1944 இல் ஐரோப்பாவைத் தாக்கும் தமது திட்டத்தை ஆராய்ந்தனர்.
  • 1962 - பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.
  • 1966 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடஸ் விடுதலை பெற்றது.
  • 1967 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
  • 1967 - சுல்பிகார் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
  • 1981 - பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
  • 1995 - வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.

பிறப்புக்கள்

  • 1825 - வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரெஞ்சு ஓவியர் (இ. 1905)
  • 1835 - மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)
  • 1858 - ஜகதிஷ் சந்திர போஸ், இந்திய முதல் விண்ணலை அறிவியலாளர் (இ. 1937)
  • 1874 - வின்ஸ்டன் சேர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1965)
  • 1950 - வாணி ஜெயராம் - பிரபல இந்தியப்பாடகி.

இறப்புகள்

  • 1900 - ஆஸ்கார் வைல்டு, ஐரிய நாடகாசிரியர், எழுத்தாளர் (பி. 1854)

சிறப்பு நாள்

  • பார்போடஸ் - விடுதலை நாள் (1966)
  • புனித அந்திரேயா விழா - கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையார்களால் கொண்டாடப்படுகிறது.
  • புனித அந்திரேயா தினம் - ஸ்காட்லாந்து நாட்டில் தேசிய தினமாகவும், வங்கி விடுமுறை தினமாகவும் ஊள்ளது.

>>>வட்டியுடன் மின்கட்டணம்: 300 அரசு பள்ளிகள் அதிர்ச்சி

மதுரை மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாத, 300 அரசு பள்ளிகளுக்கு, வட்டியுடன் மீண்டும் கட்டண ரசீது அனுப்பி, மின்வாரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு அதிக தொகையை செலுத்த முடியாது என்பதால், வட்டியை ரத்து செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரப்பில் மின்வாரியத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

>>>டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி

டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும், பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றதும், மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தகுதி வாய்ந்த ஆசிரியரை தேர்வு செய்ய, முதலில் டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. சென்னை, ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதன்பின், ஆசிரியரை தேர்வு செய்ய, வேறொரு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.

>>>கும்பகோணம் பள்ளி தீவிபத்து: நஷ்டஈடு நிர்ணயிக்க ஒரு நபர் கமிஷன்

கும்பகோணம், பள்ளி தீ விபத்தில், பலியான மற்றும் காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு, வழங்க வேண்டிய நஷ்டஈடு எவ்வளவு என்பதை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகத்தை, சென்னை ஐகோர்ட் நியமித்துள்ளது. ஆறு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க, ஒரு நபர் கமிஷனுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

>>>மாணவர்களை கண்காணிக்க மைக்ரோ சிப்: அமெரிக்காவில் எதிர்ப்பு

அமெரிக்க பள்ளிகளில், மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறிய, அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள, மைக்ரோ சிப்-க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின், சில மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், அடையாள அட்டையில், மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு, ஜி.பி.எஸ்.,தொழில்நுட்ப முறைப்படி, மாணவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. வகுப்புகள் துவங்குவதற்கு முன்பாக, மணி அடித்த பிறகும், வராத மாணவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப, அவர்களது வருகை பதிவேட்டில், "பிரசன்ட்"அல்லது, "ஆப்சென்ட்'' போடப்படுகிறது.

>>>கணிதத்திறன் மேம்படுவதற்கான ஒரு சிறந்த வழி

மேதமேடிகல் டிரெய்னிங் மற்றும் டேலன்ட் சர்ச் ப்ரோகிராம்(எம்டிடிஎஸ்) என்பது, முழுமையான கணிதத்தில், விரிவானதொரு கோடைகால படிப்பாகும். இப்படிப்பானது, கணித சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திறனை அளிக்கிறது.
இப்படிப்பை முடித்த பலர், TIFR, ISI, IISc, CMI, IIT and University of Wisconsin போன்ற பல்வேறான கல்வி நிறுவனங்களில், கணித ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றுகிறார்கள்.

>>>இந்தியாவின் சிறந்த பல்கலைகள்

2012ல் இந்தியாவில் உள்ள பல்கலைகளில், பாடப் பிரிவுகள், சிறப்பு தகுதி, சேர்க்கை முறை, மாணவர்கள், ஆசிரியர்களின் கல்வியறிவு, தேர்ச்சி விகிதம், தேர்வு முறை முதலியவற்றை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடும் சிறந்த பல்கலைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் 45 இடங்களை பெற்ற பல்கலைகள்
1. டில்லி பல்கலை  டில்லி
2. ஜவஹர்லால் நேரு பல்கலை  டில்லி
3. பனாரஸ் இந்து பல்கலை  வாரணாசி
4. கோல்கட்டா பல்கலை  கோல்கட்டா
5. சென்னை பல்கலை  சென்னை

>>>அரசு கலை-அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு 3 நாள் பயிற்சி

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில், 55க்கும் மேற்பட்டோர் புதிய முதல்வர்களாக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு, நிர்வாகம் சார்ந்த, மூன்று நாள் பயிற்சி, சென்னையில் நேற்று துவங்கியது. மாநிலத்தில், 69 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், 55 கல்லூரிகளில், முதல்வர்கள் இல்லாமல், பொறுப்பு நிலையில், பலர் பணியாற்றி வந்தனர். சமீபத்தில், தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதல்வர்களாக பதவி உயர்வு செய்து, உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

>>>சென்னையில் ஐ.ஐ.எம்., கிளை

இந்தியாவில் தற்போது 13 ஐ.ஐ.எம்.,(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் திருச்சி ஐ.ஐ.எம்., நிறுவனமும் ஒன்று.
இக்கல்லூரியில் 2011, ஜூன் 15ம் தேதி முதல், வகுப்புகள் தொடங்கப்பட்டன. இங்கு PGPM (PostGraduate Programme) மற்றும் FPM (Fellow Programme in Management) ஆகிய மேலாண்மை படிப்புகள் வழங்கப்படுகின்றன. பெங்களூரு ஐ.ஐ.எம்., மேற்பார்வையில் இது செயல்படுகிறது.

>>>தனியார் பொறியியல் கல்லூரிகள் கண்காணிப்பு குழுவில் மாற்றம்

தனியார் பொறியியல் கல்லூரிகள், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனவா என்பதை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்கான குழுவை மாற்றி அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய குழுவில், அண்ணா பல்கலை பேராசிரியர்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.

>>>நடைமுறைக்கு வராத அரசாணை : பார்வையற்ற பட்டதாரிகள் அவதி

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை இன்னும் நடைமுறைக்கு வராத நிலை தொடர்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கல்வி பயிலவும், பணியில் சேரவும், 1 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, 2006ல் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் படி, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால், மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

>>>பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 28 விடுதிகள் : பிற்பட்டோருக்கு உதவுகிறது அரசு

தமிழகத்தில், பிற்படுத்தப்பட்ட கல்லூரி, பள்ளி, பாலிடெக்னிக் மாணவ, மாணவியருக்கு, 6.16 கோடி ரூபாயில், 28 விடுதிகள் கட்டவும், 103 விடுதிகளில், சூரிய சக்தி மின் அமைப்பு அமைக்கவும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு : மிகவும் பின்தங்கிய எட்டு மாவட்டங்களில், எட்டு கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் விடுதிகள், என 16 விடுதிகள், 3.57 கோடி ரூபாயில் கட்டப்படும். இந்த விடுதிகளில், காப்பாளர், சமையலர் என, 64 பணியிடங்கள் மற்றும், 16 காவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

>>>கல்வித் துறையில் நிரப்பப்படாத 1,200 கருணை பணியிடங்கள்

கல்வித் துறையில், கருணை அடிப்படையிலான, 1200 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இயக்குனர், கூடுதல் இயக்குனர், சி.இ.ஓ., தொடக்க கல்வி அலுவலகங்களில் 15 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பணி நியமனங்களில், 25 சதவீத காலியிடங்களை கருணை அடிப்படையில் காத்திருப்போருக்கு ஒதுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்ட போதும், 1997 முதல், கருணை அடிப்படையில் காத்திருப்பவர்களுக்கு பணி வழங்காததால் காலிப்பணியிடம் 1200 ஆக உயர்ந்துள்ளது.

>>>மாணவர்களுக்கான இலவச திட்டங்கள் மார்ச்சுக்குள் முடிக்க கல்வித்துறை தீவிரம்

நிலுவையில் உள்ள மாணவ, மாணவியருக்கான இலவச திட்டங்களை, மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கு, கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கலர் பென்சில், கிரையான் பென்சில் மற்றும் கணித உபகரணபெட்டி திட்டங்களை, விரைவில் முதல்வர் துவக்கி வைப்பார் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>அரசு சிறார் காப்பகங்கள்: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

அரசு சிறார் காப்பகங்களின் செயல்பாடுகளை, மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்" என, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ராயபுரம், எஸ்.என். செட்டி தெருவில் உள்ள, அரசு சிறார் காப்பகத்தில் இருந்து, கடந்த, ஜூன் மாத இறுதியில், 34 சிறார்கள், நள்ளிரவில் தப்பினர். இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம், சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு துறை செயலர்களுக்கு, "நோட்டீஸ்" அனுப்பியது.

>>>வாய்ப்புகள் வரும் என்று காத்திராதே!

 
''இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், உன் பள்ளியை இழுத்து மூடிவிட வேண்டும். நீ ஜெயித்தால் நான் சொல்லிக்கொடுப்பதை நிறுத்திக் கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?" என்று கொக்கறித்தார் குங்ஃபூவில் புகழ்பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாக தற்காப்புக் கலைகளைக் கற்று தரும் புரூஸ் லீ, எவ்விதத் தயக்கமும் இன்றி சவாலுக்கு சம்மதித்தார். சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். ஒரே நாளில் அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ் கிடுகிடுவெனப் பரவியது.

>>>தொப்பை அதிகமாக இருக்கா? குறைக்க வழி இருக்கு!

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

>>>கலிலியோ கலிலி

 
காலம்காலமாக உலகம் உண்மை என்று நம்பி வந்த பல விஷயங்களை தவறு என்று அறிவியல்பூர்வமாக நிரூபித்து உண்மையை உலகுக்கு சொன்னவர் கலிலியோ கலிலி.

1564-ல் இத்தாலியில் பிறந்தவர். முதல் டெலஸ்கோப்புக்கு சொந்தக்காரர். இலேசான பொருட்களை விட கனமான பொருட்கள் வேகமாக கீழே விழும் என்ற அரிஸ்டாட்டிலின் கூற்று தவறு என நிரூபித்தவர்.இதற்கான சோதனையை பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தின் மீதிருந்து செய்தார் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை.

>>>தூத்துக்குடி...

 
தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகும் !!

இது தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்
டது. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி என்றாலே முத்துக் குளிப்பது நினைவுக்கு வந்துவிடும். இங்கு பாரம்பரியமான தொழில் உப்பு தயாரிப்பது. இது ஒரு துறைமுக நகரமாகும். சரக்குப் பேட்டகங்களை கையாள்வதில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் இதுதான். தற் போது ஸ்பிக், ரசாயனத் தொழிற்சாலை மற்றும் அணு ஆற்றல் தயாரிக்க உதவும் கனநீர் தொழிற்சாலை, மின் ஆலை போன்றவையும் உள்ளன.

>>>வியாபாரம் ஆகும் கல்வி

குழந்தையின் கல்விக்காக நூறு ரூபாய் செலவு செய்ய தடுமாறும் பெற்றோர்கள் உள்ள தமிழகத்தில்தான் தன் குழந்தையின் எல்.கே.ஜி சீட்டிற்காக 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கூடைப்பந்து மைதானத்தை கட்டிக்கொடுத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஒருவர். அடுத்த கல்வியாண்டிற்கான அட்மிசன் ஜனவரி மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த கூத்து அரங்கேறி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


>>>பயங்கரமான ஆட்கொல்லி (பிரானா மீன்) !!!

 
உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால் 'பிரானா' என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.

இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.

>>>வீர சிவாஜி கற்ற பாடம்

வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார்.

>>>இள நெஞ்சில் எழுச்சி தீபமே ஆசிரியர் லட்சியம்!

ஆசிரியர்கள் மீதும் தீராத அன்புள்ளம் கொண்டுள்ளவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம். எதிர்கால இந்தியா இன்றைய மாணவர்களை நம்பி உள்ளது என்பதில் மாற்றிக்கருத்து இல்லாதவர். மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமின்றி பாடமாகவும் ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்பது அவரது ஆழ்ந்த கருத்து. ஒரு சிற்பி வெரும் சிற்பியாக மட்டுமே வாழ்ந்திருந்தால் நூற்றுக்கணக்கில் சிற்பங்களை மட்டுமே உருவாக்கி இருப்பர். அந்த சிற்பி ஆசிரியர் குணநலன் கொண்டு அக்கலையை மற்றவர்களுக்கு கற்பித்தால் ஆயிரக்கணக்கான சிற்பிகளை உருவாக்கி அதன்மூலம் லட்சக்கணக்கான சிற்பங்களை செதுக்கி இருக்க முடியும். அதுவே ஆசிரியர் பணி.

>>>நவம்பர் 29 [November 29]....

நிகழ்வுகள்

  • 1781 - கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
  • 1830 - போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
  • 1855 - துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
  • 1877 - தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
  • 1915 - கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்தன.
  • 1922 - ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.
  • 1929 - ஐக்கிய அமெரிக்காவின் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.
  • 1945 - யூகொஸ்லாவிய சமஷ்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
  • 1947 - பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.
  • 1950 - வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
  • 1961 - நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது).
  • 1963 - 118 பேருடன் சென்ற கனடாவின் விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியது.
  • 1982 - ஐநா பொது அவை சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.
  • 1987 - கொரிய விமானம் தாய்-பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது.

பிறப்புக்கள்

  • 1889 - எட்வின் ஹபிள், வானிலையாளர் (இ. 1953)
  • 1908 - என். எஸ். கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)

இறப்புகள்

  • 1989 - மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)
  • 1993 - ஜே. ஆர். டி. டாடா, இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி (பி. 1904)
  • 2008 - ஜோர்ன் அட்சன், டென்மார்க் கட்டிடக்கலைஞர் (பி. 1918)

>>>ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது..?

 
1.இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்!

யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்!

யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

5.பான் கார்டு!

யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

8.டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9.பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.



10.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

>>>தூய்மையான சூழலை உருவாக்குவோம்! - வெ.இறையன்பு

வெளியிலிருந்து பார்த்தால் புதிதாகப் பூத்த தாமரை போல் மலர்ந்திருந்த அந்த அழகான கட்டடம் உருவாகிற ஒவ்வொரு படியையும் நான் அறிவேன். எவ்வளவு பெரிய முதலீடு! எத்தனை பெரிய கட்டடம்! எத்தனை பேருடைய உழைப்பு! விரைவில் முடிக்க எவ்வளவு கண்காணிப்பு.

தடபுடலான விழாவுடன் அந்தப் பொதுக் கட்டடம் திறக்கப்பட்டது. எனக்கும் ஆசை இருந்தது. இப்போது அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்று ஏற்பட்ட அவாவில் அது திறந்த ஒரு மாதம் கழித்து அங்கு சென்றேன்.

உள்ளே நுழையும்போதே மூக்கைப் பிடிக்க வேண்டிய சூழ்நிலை. திரும்பிய பக்கம் எல்லாம் குப்பைகள். மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு முன்னேறும் போதே, எதுவுமே நடக்காதது போல் ஒரு சிலர் அந்த மைதானத்தை திறந்தவெளி கழிவறை ஆக்கியிருந்தார்கள். அதனால் காலை உணவைத் தேடி நன்றி விசுவாசத்துடன் பன்றிகள் சில படை எடுத்திருந்தன.

அப்படி கடமையை முடித்து வந்த ஒருவரிடம் கேட்டேன், "இங்கு கழிவறை வசதி இல்லையா?" அதற்கு அவர், "'என்ன இருந்தாலும் இந்த சுகம் வருமா" இன்னொருவர், "நான் இந்த அலுவலகத்துக்கு வரவில்லை. மதில் சுவரெல்லாம் கட்டி மறைவாக இருப்பதால் இங்கு வந்தேன்."

இவற்றையும் மீறி உள்ளே நுழைந்தேன். வாசல் பக்கம் பல்வேறு பிளாஸ்டிக் பைகள். மாடிப்படி வளைவுகளில் எச்சில் துப்பிய சுவடுகள். கண் முன்னேயே வாயில் குதப்பிய வெற்றிலையைக் காறி உமிழும் ஒருவரைக் கண்டேன். அவரைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஒரு மாதத்துக்கு முன்புதான் திறக்கப்பட்ட இந்த அழகிய கட்டடம் இப்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தம் என் மனம் முழுவதும் பரவியது. சின்ன வயதிலேயே "பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது. சிறுநீர் கழிக்கக்கூடாது. அரசுக் கட்டடங்களை நம் சொந்த சொத்தைப்போல பாதுகாக்க வேண்டும். தூய்மையான சூழலே ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. சுற்றுலாத் தலங்களை நம் வருகையால் அழுக்காக்கக் கூடாது" என்கிற உயர்ந்த குடிமைப் பண்புகளை நாம் தரித்துக்கொள்ள வேண்டும். நம் மாநிலத்தின் அருகிலேயே அமைந்திருக்கும் கேரளாவில் இந்த நிலைமையில்லை. அங்கு குடிமைப் பண்புகள் கோலோச்சுகின்றன.

வாயைப் பொத்திக்கொண்டு தும்ம வேண்டும். கைகளை வைத்து இரும வேண்டும். இவ்வா றெல்லாம் நம்மை ஒழுங்குபடுத்திக்கொள்வது அவசியம்.

'டென்மார்க்கின் தலைநகரம் எது' என்று சொல்லிக் கொடுப்பதற்கு முன், இதை சொல்லித் தந்தால் தமிழகத்தின் பல இடங்களில் மூக்கை மூடிக்கொண்டு, சில இடங்களில் கண்ணை மூடிக்கொண்டும் போக வேண்டிய அவசியம் ஏற்படாது. இவற்றைத் தட்டிக் கேட்காமல், வாயை மூடிக்கொண்டு இருந்தால், இதே நிலைதான் தொடரும்.

>>>உடுமலையில் அரசு பள்ளியை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

உடுமலை அருகே அரசு பள்ளி வளாகத்தை அசுத்தப்படும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பள்ளி முன்பு அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சி, ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள பள்ளி வளாகங்களை இரவு நேரங்களில் சிலர் மதுபானம் குடிப்பதற்கும், கழிப்பிடத்திற்காவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டி.வி., பட்டணம் பழனி ஆண்டவர் மில்ஸ் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தை சிலர் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தியுள்ளனர். மாணவர்கள் வகுப்பறை மற்றும் கட்டடம் முழுவதும் அசுத்தம் செய்து வைத்துள்ளதால், பள்ளிக்குள்ளே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியுள்ளது.
இதை கண்ட ஆசிரியர்கள், மாணவர்களும் அதிர்ச்சியடைந்து, மன உளைச்சலுக்கு ஆளாகினர். பின் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்று சில நாட்கள் இதே சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ஆசிரியர்கள், கல்விக்குழு, பள்ளிமேலாண்மைக் குழு உறுப்பினர்களை அழைத்து, கூட்டம் நடத்தினர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது கடினம்; பள்ளி வளாகம் என்றாலே தூய்மையாக வைத்திருக்க வேண்டும்; கோவில் போன்ற பள்ளி வளாகத்தை சிலர் அசுத்தம் செய்வதால், மாணவர்களும் படிக்க முடியாமல் திணறுகின்றனர் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, பள்ளி வளாகத்தை அசுத்தப்படுத்தாமல் இருக்க பொதுமக்களிடம் அறிவுறுத்துவோம்; அதையும் மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைத்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, பள்ளி முன்பு வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகையில், "கல்வி கற்பிக்கும் பள்ளியை சிலர் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். பள்ளி வளாகத்தை அசுத்தப்படுத்தவோ, கழிப்பறையாக பயன்படுத்தவோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது. மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எழுதப்பட்டுள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் அப்பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
"கல்வி கற்கும் வளாகம் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், சிலர் செய்யும் செயல்களால் அசுத்தப்படுகிறது. இதை தவிர்க்க பள்ளி முன்பு எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது. தற்போது யாரும் பள்ளி வளாகத்திற்குள் வருவதில்லை,&'&' என்றார் பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார்.
பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க ஆசிரியர்களும், மாணவர்களும் முயற்சித்தால் போதாது; அப்பகுதியை சேர்ந்த அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சாத்தியமாகும். அரசு சொத்து என்றாலும், மாணவர்கள் படிக்கும் வளாகம் என்பதால், தூய்மையாக வைத்திருக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்பதே கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

>>>வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி: சிபெட் மீது வழக்கு

பயிற்சி முடித்ததும் வேலை வழங்கப்படும் என்ற உறுதிமொழியை, 'சிபெட்' காப்பாற்றவில்லை என தெரிவித்து, வேலை கிடைக்காத, வட கிழக்கு மாநில மாணவர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களான, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய, எட்டு மாநிலங்களின் மேம்பாட்டிற்கான, வடகிழக்கு பகுதி மேம்பாட்டு துறை சார்பில், படித்த இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
சென்னையை தலைமையகமாக கொண்டுள்ள, 'சிபெட்' எனப்படும், மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில், வட கிழக்கு மாநிலங்களில், ஆறு மாதங்கள், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்; பயிற்சி முடிந்ததும், வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பை நம்பி, 2010, ஆகஸ்டில், பயிற்சியில் சேர்ந்த மாணவர்களில், 100 பேருக்கு, பயிற்சி நிறைவு பெற்ற பிறகும் வேலை கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த மாணவர்கள், கவுகாத்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், அவர்கள் கூறியுள்ளதாவது:
ஆறு மாத பயிற்சி நிறைவடைந்ததும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என கூறப்பட்டதால், 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தி படித்தோம். பயிற்சி முடிந்ததும், வீட்டுக்கு செல்லுங்கள் என, கூறப்பட்டது. நாங்கள் மறுத்ததால், பெயரளவிற்கு வேலை வழங்கினர். ஆனால், அந்த வேலைகளும் நிரந்தரமாக கிடைக்கவில்லை.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், 'சிபெட்' இடமிருந்து தகவல் கேட்கப்பட்டதில், "பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது" என, கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவ்வாறு வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. எங்களுக்கு போதுமான பயிற்சியும் வழங்கப்படவில்லை.
எங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி, தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அந்த மாணவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

>>>ஐஐடி கவுன்சிலிங்கில் ஆன்லைன் முறை ரத்து

மாணவர் சேர்க்கை செயல்பாட்டில், ஒரு புதிய விதியாக, ஆன்லைன் கவுன்சிலிங் முறை ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் நேரடியாக கலந்துகொள்ளும் முறை, அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கடந்த பல்லாண்டு காலமாக, ஆன்லைன் கவுன்சிலிங் முறை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், வரும் 2013ம் ஆண்டு முதல், இந்த நடைமுறை ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் நேரடியாக, சம்பந்தப்பட்ட ஐஐடி -களுக்கு செல்ல வேண்டிய புதிய விதிமுறை புகுத்தப்படவுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில், புபனேஷ்வர் - ஐஐடி மற்றும் ஐஎஸ்எம் - தன்பாத், ஆகியவற்றில் சேர்க்கைப் பெறுவதற்காக, 2 பேர் ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, வருங்காலத்திலும், அதுபோன்ற மோசடி நடவடிக்கைகளைத் தவிர்க்கவே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவை மேலும் கூறுவதாவது: நாட்டின் 15 ஐஐடி -கள், பனாரஸ் இந்து பல்கலை மற்றும் தன்பாத்திலுள்ள ஐஎஸ்எம் ஆகியவற்றிலுள்ள மொத்தம் 10,000 இடங்களுக்கு, ஆண்டுதோறும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிடுகின்றனர். இத்தகைய பெரிய நடைமுறை செயல்பாட்டில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர், முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
எனவேதான், இந்த புதிய விதி புகுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரில் வரும்போது, ஆள் மாறாட்டம் சாத்தியமற்றுப் போகிறது என்கின்றன சம்பந்தப்பட்ட வட்டாரங்கள்.

>>>முப்பருவ கல்வி முறை திட்டம் : டிச., 7ம் தேதி கடைசி நாள்

முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை, ஒப்புதல் பெற, வரும், டிச., 7 கடைசி நாளாகும். இதுகுறித்து, மாநில பொதுபள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் தலைவர் வெளியிட்ட அறிக்கை: மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டத்தின் அடிப்படையில், 1 முதல் 8 வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீங்கலாக, இதர பாடப் புத்தகங்களை, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில், தயார் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர், பாடப் புத்தகங்களின், இரண்டு நகல்களை, "உறுப்பினர் - செயலர் மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். பாடப் புத்தகங்கள், மல்டி கலரிலும், ஏ4 அளவிலும், 80 ஜி.எஸ்.எம்., ஹைடெக் மப்லித்தோ பேப்பரிலும், சிடிபி பிரின்டிங்கிலும், 200 ஜி.எஸ்.எம்., வர்ஜின் கேட்டெட் போர்டு அட்டையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் தோராய விலை குறிப்பிட வேண்டும்.
1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் பாடம் நீங்கலாக இதர பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்க வேண்டும். வரைவு பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது. 7ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக தீதீதீ.ஞீண்ஞு.tட.ஞ்ணிதி.டிண என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

>>>தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி?


உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்க
ோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer காணப்படுகின்றது .

Team Viewer என்றால் என்ன?

மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.

இதை தரவிறக்க இங்கே செல்லவும். Team Viewer 7.0. (http://download.cnet.com/TeamViewer/3000-7240_4-10398150.html?part=dl-6271747&amp%3Bsubj=dl&amp%3Btag=button)
இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.
உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை, இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.

நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது விண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.

இதில் இரண்டு வசதிகள் உள்ளன. இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய முடியும் . இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும், உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.

உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.

இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும்.

இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும்.

இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.

இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?

முக்கியமாக இரண்டு கணினிகளிலும் Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக மிக அவசியம்...!

>>>டெங்கு' காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை : அரசு ஒப்புதல்

"டெங்கு' காய்ச்சலால் ஏற்பட்டு வரும், உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் திணறிவரும் தமிழக அரசு, வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், சித்த மருத்துவ சிகிச்சையை துவக்கி உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், இந்த ஆண்டு, ஜூன், ஜூலை மாதங்களில், 39 பேரை பலிகொண்ட, டெங்கு காய்ச்சலின் தீவிரம், இரண்டு மாதங்களாக குறைந்தபாடில்லை.
மதுரை மாவட்டத்தில் மட்டும், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை, 50க்கும் மேற்பட்டோர் பலி ஆகி உள்ளனர். நாள்தோறும், பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதால், பொதுமக்கள் டெங்கு பீதியில் உறைந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் தன்மை உள்ளதாக, சித்த மருத்துவர்கள் கூறும், நிலவேம்பு குடிநீர் கஷாயத்தை, அக்., 26ம் தேதி முதல், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, அரசு சித்த மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, அனைத்து அரசு மருத்துவமனைகளின் சித்த மருத்துவ பிரிவுகளில் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்தது.டெங்கு காய்ச்சலை தடுப்பது மட்டுமின்றி, இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரையும், சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். இதற்கான வாய்ப்பை அரசு அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து, இம்மாதம், 2ம் தேதி, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில், டெங்கு காய்ச்சலால், நாள்தோறும் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தடுக்க முடியாததால், வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், அலோபதி சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையையும் அளிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, டெங்கு வார்டில், சித்த மருத்துவ சிகிச்சையை, சுகாதார துறை அமைச்சர் விஜய் நேற்று துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:
அலோபதி மருத்துவத்தில், டெங்கு காய்ச்சலுக்கு தனியாக சிகிச்சை இல்லை. சித்த மருத்துவத்தில் டெங்குவை குணப்படுத்த முடியும் என, பரிசோதனை முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.இச்சிகிச்சையால் பக்கவிளைவுகள் இல்லை என்பதால், மதுரை உள்ளிட்ட இடங்களில், அரசு மருத்துவமனை, டெங்கு வார்டுகளில் சிகிச்சை பெறுவோருக்கு, அலோபதி சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையும் துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் விஜய் கூறினார்.
மூன்று நாட்களில் குணம்:
அரும்பாக்கம், சித்த மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மாணவர் வீரபாபு கூறியதாவது: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, காய்ச்சலை குறைக்க, நிலவேம்பு குடிநீர் கஷாயமும், ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பப்பாளி இலை சாறும் வழங்கப்படும். இவற்றுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கு, மலைவேம்பு சாறும் தரப்படும்.
இவற்றை, அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் டெங்கு நோயாளிக்கு, வயதிற்கேற்ப, 5 முதல் 10 மி.லி., அளவிற்கு, ஒரு நாளைக்கு, நான்கு முறை அளித்தால், மூன்று நாட்களில், "டெங்கு' குணமாகும்.
டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்படும் புறநோயாளிகளுக்கும், சித்த மருந்துகளை தருவதன் மூலம், "டெங்கு'வை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு வீரபாபு கூறினார்.நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுற்றறிக்கை

டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்களுக்கு, சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்து, மருத்துவகல்வி இயக்குனர், பொது சுகாதார துறை இயக்குனர், ஊரக மருத்துவப் பணிகள் இயக்குனர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகள், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு, இச்சிகிச்சை குறித்து தெரிவிக்க, மாவட்ட கலெக்டர்கள், இந்திய மருத்துவ துறை கமிஷனர் ஆகியோர், அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதார துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>நிலநடுக்கம் ஏற்படுவது எப்படி?

 



நமது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது உங்களில் சிலர் அதனை உணர்ந் திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

இலேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 இலட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன.

பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக் கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும்.

ஜப்பானில்தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக இலேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை.

பசிபிக் கடலில் உள்ள பல தீவுகள், இந்தோனேஷியா, துருக்கி, கிரேக்கம், தென் அமெரிக்கச் சிலி ஆகியன நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளன. 1883ஆம் ஆண்டு ஆகச்டு மாதம் 26ஆம் நாள் இந்தோனேஷியா அருகே யுள்ள கிரகடோவாத் தீவில் கராங் எனும் எரிமலை பயங்கரமாகக் கக்கியபோது நிலநடுக்கம் ஏற்பட்டு அத்தீவின் சில பகுதிகள் கடலில் மூழ்கின.

1923ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேர் உயிரிழந்தனர்.

1939இல் தென் அமெரிக்கச் சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருபதாயிரம் பேரும், அதே ஆண்டில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.

1993 ஆம் ஆண்டு இந்தியாவின் மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 25 ஆயிரம் மக்களும்,

2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். இப்படிப் நிலநடுக்கம் ஏற்பட்டுப் பல உயிர்கள், உடமைகள் அழிவது ஏன்? பூமியில் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களின் வெளிவிளைவுகளே நிலநடுக்கம்.

பூமியின் மேலே தோடுபோல அமைந்துள்ள மேற்புறப் பகுதி பாறைகளைக் கொண்டுள்ளது. இதனைப் புறணி என்பர்.

இப்புறணி எல்லா இடங்களிலும் நிலையாக அமைந்து இருக்கவில்லை. அவ்வாறு உறுதியாக அமைந்திராத இடங்களில் உட்புறப் பாறைகள் விரிசல் விட்டுச் சரிகையில், உட்புறத்தில் அமைந்த பெரும்பாறைகள் வேறு பெரும்பாறைகளுடன் மிகுந்த ஆற்றலுடன் உராய்கின்றன. அதனால் ஏற்படும் அதிர்வுகள் பூமியின் மேற்பரப்பை அடைவதால் பூமி அதிர்ச்சியான நிலநடுக்கம் ஏற்படுகிறது.

பூமிக்குள்ளே ஏற்படக்கூடிய இம்மாறுதல்கள் எல்லாமே வெளிப்பகுதியில் விளைவினை உண்டாக்குவதில்லை.

பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமைந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதியில் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவேதான் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது.

>>>விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…

இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு.

A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift).

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust.

C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight.

D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag.

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்.

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்.

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்.

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்.

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின், அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது).

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது.

எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்.

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது.

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்.

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது.

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்).

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்.

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்.

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது).

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது...

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா...?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது...!

>>>நவம்பர் 28 [November 28]....

நிகழ்வுகள்

  • 1520 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
  • 1729 - மிசிசிப்பியில் நட்சே இந்தியர்கள் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இனத்தவரைக் கொன்றார்கள்.
  • 1821 - பனாமா ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
  • 1843 - ஹவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
  • 1893 - நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
  • 1905 - ஐரிஷ் தேசியவாதி ஆர்தர் கிறிபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
  • 1912 - அல்பேனியா ஒட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1918 - புக்கோவினா ருமேனிய இராச்சியத்துடன் இணைய முடிவு செய்ததூ.
  • 1942 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 491 பேர் இறந்தார்கள்.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் டெஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.
  • 1958 - சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
  • 1960 - மவுரித்தேனியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
  • 1964 - நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
  • 1975 - கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1979 - நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 1987 - தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 1989 - பனிப்போர்: செக்கொசிலவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
  • 1990 - ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
  • 1990 - லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.
  • 1991 - தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
  • 2006 - நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.

பிறப்புக்கள்

  • 1820 - பிரெட்ரிக் ஏங்கல்ஸ், ஜேர்மன் அரசியல் மெய்யியலாளர் (இ. 1895).
  • 1864 - ஜேம்ஸ் ஆலன், ஆங்கில எழுத்தாளர் (இ. 1912)
  • 1984 - ஆன்டுரூ போக, ஆஸ்திரேலிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

  • 1694 - மட்சுவோ பாஷோ, ஜப்பானியக் கவிஞர் (பி. 1644)
  • 1939 - ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் (பி. 1861)
  • 1954 - என்றிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1901)

சிறப்பு நாள்

  • அல்பேனியா - விடுதலை நாள் (1912)
  • மவுரித்தேனியா - விடுதலை நாள் (1960)

>>>SET 2012 - Answer Key

The SET 2012 answer key is hereby released for the paper - I (common for all subjects). In order to conduct the SET2012 exam in a systematic way, the booklets have been shuffled with different questions and answers.
Hence, the candidates who have taken the SET 2012 exams are advised to verify their respective answer keys as follows for Paper-I.
Candidates whose OMR sheets ending with the digits 1 or 6 are advised to verify the answer keys in ‘A’ Set of kets.
Similarly OMR sheets ending with the digits
2 or 7 ‘B’Set ,
3 or 8 candidates with ‘C’ Set,
4 or 9 candidates with ‘D’ Set and
5 or 0 candidates with ‘E’ set.
  • OMR Ends with Digit 1 or 6 -> A - SET
  • OMR Ends with Digit 2 or 7 -> B - SET
  • OMR Ends with Digit 3 or 8 -> C - SET
  • OMR Ends with Digit 4 or 9 -> D - SET
  • OMR Ends with Digit 5 or 0 -> E - SET
Subject Code Subject Paper 2 Paper 3
1 Chemical Sciences
2 Commerce
3 Computer Science and Application
4 Economics
5 Education
6 Electronics
7 English
8 Geography
9 Hindi
10 History
11 Home Science
12 Journalism & Mass Communication
13 Law
14 Library and Information Science
15 Life Sciences
16 Management
17 Mathematical Science
18 Music
19 Philosophy
20 Physical Education
21 Physical Sciences
22 Political Sciences
23 Psycology
24 Public Administration
25 Social Work
26 Sociology
27 Tamil

>>>எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

ஐகோர்ட் உத்தரவை அடுத்து, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தேர்வு மதிப்பீட்டு முறையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகம், புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மருத்துவ மாணவர்களுக்கு சாதகமாக, நேற்று தீர்ப்பு வெளியானது. இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை, மருத்துவப் பல்கலை நிர்வாகம், இணைய தளத்தில், நேற்று மாலை வெளியிட்டது. இதில், எம்.பி.பி.எஸ்., மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 66.66 சதவீதத்தில் இருந்து, 84.88 சதவீதமாக அதிகரித்துள்ளது என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>கலை பண்பாட்டு ஆசிரியர் பதிவு மூப்பு

சென்னை கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் குரலிசை, தேவாரம், வயலின், நாதஸ்வரம், பரதநாட்டியம் மற்றும் தவில் பாடங்களுக்கு, ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர். 1.7.2012 அன்று 30 வயது முடிந்த, 58 வயது நிறைவடையாதவராக இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 20.11.2012 வரை பதிவு செய்தவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி வரையுள்ள பதிவுதாரர்கள், பதிவை இன்று (நவ., 27) நேரில் பதியலாம், என வேலை வாய்ப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

>>>கார்த்திகை தீபம் ஏற்றும் முறையும் பலனும்!

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
தீப லட்சுமி துதி
1. தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே
ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலைஇருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.
2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே
எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே... எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன்.
3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
எவரால் தினமும் தீபம் ஏற்றப்படுகிறதோ அவரது இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல செல்வங்களும் சேரும். (விபூதி என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு). அவர் வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள்.
4. கீடா: பதங்கா: மசகாச் ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே ஏ நிவஸந்து ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜோ
பவந்தி நித்யம் ஸ்வசாஹி விப்ரா:
நுண்ணுயிர்கள், புழுக்கள், கொசுக்கள், வண்டுகள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள் இவற்றோடு ஆகாயத்தில், பூமியில் நீரில் என எல்லா இடங்களிலும் உள்ள உயிர்கள் எவையானாலும் அவற்றின் எல்லா பாவங்களும் தீபஜோதியாகிய திருவிளக்கினை தரிசிப்பதால் நீங்கும். பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கக்கூடிய ஜோதிலட்சுமியை வணங்குகிறேன். பிரகாசமான வாழ்வினை அவள் எனக்கு அளிக்கட்டும்.
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது.
விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
 அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:
திருவிளக்கு பூஜை விதிமுறை
* விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
* ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
* சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணைவிளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
விளக்கு பூஜை மாத பலன்
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன் தரும்.
சித்திரை - தானிய வளம்.
வைகாசி - செல்வச்செழிப்பு.
ஆனி - திருமண பாக்கியம்.
ஆடி - ஆயுள்பலம்.
ஆவணி - கல்வித்தடை நீக்கம், அறிவார்ந்த செயல்
புரட்டாசி - கால்நடைகள் அபிவிருத்தி
ஐப்பசி - நோய் நீங்குதல்
கார்த்திகை - புத்திரபாக்கியம், சகல வளம்.
மார்கழி - ஆரோக்கியம் அதிகரிப்பு.
தை - எடுத்த செயல்களில் வெற்றி.
மாசி - துன்பம் நீங்குதல்.
பங்குனி - ஆன்மிக நாட்டம், தர்மசிந்தனை வளர்தல்.
எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
பொட்டு வைக்கும் முறை
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
எந்த எண்ணெய்க்கு என்ன பலன்?
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்
ஐந்துக்கும் ஒவ்வொரு பலன்
விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்
எந்த திசை என்ன பலன்
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
இவர்களுக்குரிய எண்ணெய்
விநாயகர்- தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...